"ஒருத்தன் எப்படி வாழ்ந்தாங்குறது முக்கியம் இல்ல அவனுக்கு சாவு எப்படி வருதுங்குரதுதான் முக்கியம் ". " நல்ல உயிர் ஒருநொடில பட்டுன்னு போயிரும் . நிறைய பாவம் பண்ணியவன் அழுந்திச் சாவான்". சாவு பற்றி இப்படியான பேச்சுக்கள் நாம் கேட்டு இருப்போம் . எங்க ஊர்ல இந்த சாவு விசயத்துல சில சடங்குகள் இருக்கு . என் வீட்ல குடத்தின் மேலே சொம்பு வைக்ககூடாது , வெருங்குடத்தை கமத்தி வைக்ககூடாது என்று என்னை சின்ன வயசுல திட்டுவாங்க . அதன் அர்த்தம் கொஞ்சம் விவரம் வந்த பிறகே தெரிந்தது . எங்க ஊர் வழக்கப்படி ஊர்ல ஒரு சாவு விழுந்தா ஊர் வரி குடுக்குறவங்க வீட்ல யாரும் எந்த வேலைக்கும் போகக்கூடாது . சாவு வீடு முன் பந்தல் போடப்பட்டு பச்சை ஓலையும் போட்டு இருப்பாங்க . சாயங்காலம் ஒரு 3 மணி வாக்குல ஊர் ஆண்கள் எல்லாம் ஒரு குடம் அல்லது பெரிய சொம்பு எடுத்துட்டு ஊர் குளத்துக்கு போய் தண்ணீர் எடுத்துட்டு வருவாங்க . பெண்கள் எல்லாம் சாவு வீட்ல ஒப்பாரி வச்சு அழுவாங்க , தாயரடிப்பாங்க .(கும்மி அடிக்குற மாதிரி வட்டமா இறந்தவர் அருமை பெருமை சொல்லி அழுதுகிட்டே அடிப்பாங்க). ஊதுவத்தி வாசம் பூ வாசம் எல்லாம் சேர்ந்து ஒருமாதிரி இருக்கும் . சின்ன வயசுல யோசிப்பேன் இந்த சாவு வீடுகளுக்காகவே இந்த ஊதுபத்தி விசேஷமா செய்வாங்களா என்ன என்று .
ஆண்கள் கொண்டு வர தண்ணீர் கொண்டு பெண்கள் இறந்தவர் உடலை குளிப்பாட்டி புதுத்துணி போட்டு ஒரு நாற்காலியில் உக்கார வச்சு மேக் அப் பண்ணுவாங்க . தாடை,தலை சேர்த்து ஒரு துணி வச்சு கட்டி நெத்தில வட்டமா சந்தனம் வச்சு அதுல ஒரு பெரிய ஒரு ருபாய் நாணயம் வச்சு ஜம்முனு உக்கார வச்சு எல்லாரும் கூடி அழுவாங்க . இந்த சர் கெட் அப் போட்டோ எங்க ஊர்ல நிறைய வீடுங்கள்ல பார்க்கலாம் . (வாழும்போது எடுக்காம செத்த பிறகுதான் எடுப்பாங்க என்ன ஆளுங்களோ ). இதற்குள் தேர் ரெடி ஆயிருக்கும் . இறந்தவர் மகன்கள் எல்லாம் முச்சந்தியில் கெண்டி சுத்தி உடைப்பாங்க . பிறகு தேரிலே வைத்து ஆண்கள் தூக்கிச்செல்ல பின்னாடியே பழம் சாக்லேட் எல்லாம் வீசிக்கொண்டே செல்வார்கள். தேரடி முக்கில் இறந்தவர் உடலை கடைசியாய் வைத்த ஓலைப்பாய் , நார் கட்டில் எல்லாம் ஒரு ஓரமாய் போட்டு இருப்பர் . (அதை பார்த்து நான் பயந்த நாட்கள் அதிகம் ). தலைச்சன் பிள்ளை என்றால் எரிச்சுடுவாங்க. மத்தபடி புதைப்பதே வழக்கம் . புதைத்தபின் அதன் மேல் ஒரு பிரண்டை செடி வச்சுட்டு வருவாங்க . அந்த செடி அங்கே நல்லா வளரனும் அப்போதான் அந்த ஆத்மா அது வாழ்ந்த வீட்டை விட்டு சென்று விட்டதாய் அர்த்தம் . எல்லாரும் அப்படியே குளத்துல போய் ஒரு குளியல் போட்ட பிறகே வீடு வந்து சேருவாங்க . அந்த வெற்று குடம் கமத்தி வைக்கப் பட்டு இருக்கும் . இதில் செத்தவங்க உடல் எத்தனை நாள் எரியுதுன்னு கூட நாள் கணக்கு போடுவாங்க . நல்லவன் செத்தா சீக்கிரமா மண்டை வேகுமாம் . ஒருத்தர் சாவுதான் மறக்க முடியாதது . அவ்ளோ நாத்தம் . ஆளுங்க எல்லாம் துண்டுல பூ வச்சு மூக்குல கட்டிதான் அவர தூக்கிட்டு போனாங்க .தூரத்துல நின்ன எனக்கே அந்த வாடை வந்தது . பிணநாத்தம் அப்போதான் தெரிஞ்சது . வாழும்போது அவர் பண்ணிய அட்டகாசங்கள் தான் அவருக்கு இப்படியொரு சாவுன்னு பேசிக்கிட்டாங்க, அவர் மண்டை மூணு நாலா எரிஞ்சதாம் .
இதில் ஒரு சின்ன காமெடி எங்க வயல் மூன்று ,பக்கத்து கிராமத்துல உண்டு அதுவும் சுடுகாட்டு ஓரம் . அதன் மேலேதான் வயலுக்கு போக வழியே இருக்கும் . பிரண்டை வளர்ந்த இடங்களும் எரித்த தடங்களும் போகும்போது கொஞ்சம் பயம் வர மாதிரிதான் இருக்கும் . அது பல கிராமங்களுக்கு சுடுகாடு என்பதால் எப்பொழுதுமே ரொம்ப பிசியா இருக்கும் . ஒருமுறை என் அண்ணா காலைலேயே வயலுக்கு போக அங்கே முந்தின நாள் எரியூட்டப்பட்ட உடல் எலும்புக்கூடு மட்டும் எழுந்து நிற்க அதைப் பார்த்த என் அண்ணா வேகமா வீட்டுக்கு வந்துட்டான் . 2 நாள் சரியான காய்ச்சல் அவ்ளோ பயந்து போயிருக்கான் . ஒருமுறை நான் வயலில் இருக்கும்போதே ஒரு இடத்துல குழி வெட்டுறாங்க பயத்துல எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு . வயலில் கொக்கு விழாமல் இருக்க சில கம்புகள் நட்டு முண்டாசு மாதிரி கட்டி வச்சுருப்பாங்க . என் அண்ணா எப்போதுமே இரவில்தான் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச போவது வழக்கம் . (கிணற்று பாசனம் அல்ல வாய்க்கால் பாசனம் மட்டுமே , பகலில் அனைத்து வாய்கால்களும் அடைத்து தண்ணீர் கொண்டு போறது ரொம்ப கஷ்டம் .) எப்படினா பயமில்லாம ராத்திரியில் போறேன்னு கேட்டா ,பகலில் எத்தனை முண்டாசு இருக்குனு எண்ணி பார்த்துட்டு வருவானாம் இரவில் கூட ஒன்னு இருந்தாலும் வயலில் இறங்க மாட்டானாம் எவ்ளோ புத்திசாலி ? . ஆள் அரவமில்லாத இடம் அதும் பெரிய சுடுகாடு ராத்திரி 11 மணி பிறகு எப்படி இருக்கும் .
செத்தவங்களுக்கு கிடைக்குற கடைசி மரியாதையே அந்த கடைசி நாள் சடங்குகள்தான் . சில தருணங்களில் எங்கள் ஊரில் அதுவும் மறுக்கப்படுது . ஊர் கோவில் திருவிழா மார்கழி ,சித்திரை இரண்டு மாதங்களில் இரண்டு கோவில்களுக்கு வரும் . மாதம் பிறந்த முதல் செவ்வாய் கால் நட்டி நோன்பு வைத்த பிறகு அடுத்த செவ்வாய் புதன் திருவிழா நடக்கும் . இந்த இடைப்பட்ட ஒரு வாரத்துக்குள் யாராவது இறந்து விட்டால் அவரை இரவோடு இரவாக சொந்தபந்தங்களுக்கும் தெரியப் படுத்தாமல் எடுத்து போய் அடக்கம் பண்ணிடுவாங்க . அந்த ஏழு நாட்களில் சங்கு சத்தமோ , மேளம் சத்தமோ கேட்க்ககூடாது என்று காலம்காலமாய் கடைபிடிச்சு வர்றாங்க . எனக்கு தெரிந்து ஒருவர் இந்த மாதிரி அடக்கம் செய்யப்பட்டார் . அவர் பெயர் "மண்டையப் பெரியப்பா " எனக்கு இவரை இப்படித்தான் தெரியும் இன்றுவரை . அவருடைய தலை வழுக்கை ஒரு முடிகூட இருக்காது , அவரை சின்ன வயசுல பார்த்த இடத்துல எல்லாம் அரைக்கை,முழுக்கை ,வழுக்கை என்று கிண்டல் செய்வோம் . அவரும் எங்கள பார்த்த உடனே கம்பு எடுத்து விரட்டுவாறு . அவர் இந்த மாதிரி நோன்பு போட்ட வாரத்தில் இரண்டு வருடம் முன்பு இறந்ததால் விடிகாலை 4 மணிக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்ணிருக்காங்க . கேட்டதுமே மனசு கஷ்டமா போச்சு . கடைசி நாள் காரியம் கூட அவருக்கு கிடைக்க கொடுத்து வைக்கலையே . இதற்காகவே இந்த நேரத்துல சாவு வரக்கூடாதுன்னு வேண்டுவாங்க . இரவு 10 க்கு மேல முச்சந்தியில நாய்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து ஓலையிடும் அப்படி சத்தம் வந்தாலே என் அக்காவும் நானும் ஊர்ல யாரு போற ஸ்டேஜ்ல இருக்குறாங்கனு எண்ண ஆரம்பிச்சுடுவோம் . நம்புங்க அப்படி நாய்சத்தம் கேட்ட ஒரு வாரத்துக்குள் ஒரு சாவு விழும் .முதல்முறை அப்படி சாவு விழுந்து பார்த்ததுல இருந்து நாய் ராத்திரியில் கத்தும் சத்தம் கேட்டாலே பயம் வரும் இப்போ வரைக்குமே .
எதிர்த்த வீட்டு மாமா சாவுதான் சரியான காமெடி . அவருக்கு 80 வயசு இருக்கும் . நடக்கவும் முடியல அவர் இப்போ சாவார் அப்போ சாவார்னு எம் டன் மகன் படத்துல வர மாதிரி எதிர் பார்த்தாங்க .அவரும் அசராம பேரன் வாங்கிவந்த 1 கிலோ ஸ்வீட்ஸ் ஒத்தையாளா காலி பண்ணிட்டார் . அதோட விளைவுகள் அந்த அக்காதான் பாவம் (அவர் மனைவி ) அள்ளி சுமந்தாங்க . அதுக்கு அவங்க வருத்தப்பட்டதை விட பாவி மனுஷன் கொஞ்சமும் வைக்காம ஒத்தை ஆளா தின்னுட்டான் இவன் எப்போ போய் சேருவானு தெரியலையே ஜானகி (என் அம்மா ).அஷ்டமி நாளில் தலைக்கு நல்லெண்ணெய் வச்சு குளிப்பாட்டி செவ்வழனி குடுத்தும் பார்த்தாங்க .இழுத்துகிட்டு கிடந்தா இப்படி செஞ்சா உடனே உயிர் போயிடுமாம் .(யாரும் ட்ரை பண்ணாதீங்க ). ஆனாலும் அவர் ரொம்ப ஸ்டார்ங் . ஒருவழியா அந்த அக்காவை நல்லா வேலை வாங்கின பிறகுதான் போய்ச் சேர்ந்தாரு.
இங்க சென்னையில் நிறைய சாவு ஊர்வலம் பார்த்துருக்கேன் எனன அழகா பூ அலங்காரம் பண்ணி ஒரு விஷேசம் மாதிரி எடுத்துட்டு போறாங்க . போன வாரம் ஒரு சாமி ஊர்வலம் வந்தது வீட்டு பக்கம் . அந்த சாமி மலர் அலங்காரமும் இதுபோலவே இருந்தது . மனசு ஏனோ அப்போ சாவு ஊர்வல மலர் அலங்காரத்தையும் சாமி ஊர்வல மலர் அலங்காரத்தையும் ஒப்பிட்டு பார்த்துச்சு . மனசுக்குள்ளே நினைச்சுகிட்டேன் இந்த ஊர்ல சாமினாலும் சாவுனாலும் ஒரேமாதிரியே மலர் அலங்காரம் பண்ணுறாங்களே எப்படி இவங்களால மட்டும் முடியுதுன்னு .
சாவு வீட்ல மூணாம் நாள் வரை காலையில் சொக்கார்(ஒருவித சொந்தம் ) வீட்டு ஆளுங்கதான் இட்லி செஞ்சி கொண்டுபோய் குடுக்கணும் கொண்டு போகலேன்னா சரியா திட்டு விழும் . இப்போ இந்த முறை விட்டு போச்சு . இன்னும் நிறைய சாவு சடங்குகள் உண்டு . நான் இந்த மாதிரி இடங்களுக்கு போய் ரொம்ப வருஷம் ஆகுது . பள்ளி முடித்ததில் இருந்து வெளிவாசம் என்பதால் நிறைய சடங்கு முறைகள் மறந்து விட்டன . சில இடங்களில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அதுவும் தெரிந்து கொள்ள முடியாது . அதைப் பற்றி கேட்டாலும் அதெல்லாம் உனக்கு எதுக்குன்னு திட்டுதான் விழும் . தெரிந்த வரை மட்டுமே எழுதிற்க்கேன்.
