
பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிபடிப்பு , பட்டபடிப்பு இரண்டுமே தாமிரபரணி சுற்றியே இருந்தன . கல்லூரி நாட்களில் நெல்லையப்பர் கோவில் செல்லும் பொழுதெல்லாம் கண்கள் பாலத்தின் மீதிருந்து தாமிரபரணியை புகைப்படமெடுக்கும் .
பள்ளிபருவத்தில் அரிதாய் அம்மா பிறந்த ஊருக்கு செல்லும்போது உறவுக்காரர்களும் , என் வயது வாண்டுகளுமாய் மதியக்குளியல் போட அடர்ந்த காட்டு வழியே கும்பலாய் சென்ற நாட்கள் .
விடுமுறை நாட்களில் பெரியம்மா வீட்டிற்கு சென்ற காலங்களில் தினக்குளியல் தாமிரபரநியில்தான . போகும் பாதை முடியும் வரை அங்கு ஆறு ஓடுவதே கண்ணுக்கு தெரியாது , ரோட்டின் முடிவில் திடிரென்று ஆறு தெரியும் அந்நிலப்பரப்பு அவ்வாறு இருக்கும் .முழங்கால் அளவே இருக்கும் தண்ணீரில் மறுகரையில் இருக்கும் கொடுக்காபுளி மரங்களை ரசித்துகொண்டே மணிக்கணக்காய் ஆற்றிலே போடும் ஆட்டம் , மறக்க முடியாத நாட்கள் . இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவிழாக்காக போன பொழுது நடந்த காமெடி , நான் அக்கா , பெரியக்கா என எல்லாரும் குளித்து முடித்து ஒத்தயடி பாதை வழியாய் வந்து கொண்டு இருந்தோம் நான்தான் கடைசி . திருவிழா வழக்கப்படி ஆற்றிற்கு நீர் எடுக்க சுடலைமாடசாமி ஆடும் நபர் வருவார் அப்பொழுது எதிரே யாரும் வரக்கூடாது (சின்னதாயி தமிழ் படம் இதை மையபடுத்தி இங்கு எடுக்கப்பட்டதே ) நான் ஒரு குனிந்த தலை நிமிரா பெண் (நம்புங்க ) சாமியாடி வருவதை கவனிக்கவில்லை . முதலில் சென்ற என் அக்கா என்னை ஒதுங்குமாறு திடிரென்று சத்தமாய் கூற நான் பூசாரிக்கு பயந்ததைவிட என் அக்காவின் கூக்குரலுக்கு பயந்து ஆடிபோய்விட்டேன் . எதோ அசம்பாவிதம் என்ற பயத்திலும் , குளிருளும் உடம்பு நடுங்கிவிட்டது (இரவு அவர் கையினால் விபூதி என் நெற்றியில் , வயசுப்பொண்ணு பயந்து போயிட்டேன்னு .......... நான் பயந்தது வேற )
இன்று எப்பொழுது சென்னை வந்தேனோ அப்போதிருந்து மினரல் கேன் வாழ்க்கை . மினரல் தண்ணீர் குடிக்கும் பொழுது தாமிரபரணி தண்ணீர் சுவை வந்து போவதை தடுக்க முடியவில்லை .
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்ச செய்திகளை படிக்கும் பொழுது அப்பா சொல்லுவார் புண்ணியம் பண்ணியவன் தாமிர பரணி கரையிலே பிறப்பான் என்று சத்தியம் , எங்கள் ஊரில் ஏக்கர் கணக்கில் விளைநிலங்கள் அத்தனையும் வாய்க்கால் பாசனம் (வெள்ளைக்காரன் உபயத்தினால் அவ்வளவு பெரிய குளம் உண்டு )ஒரு பம்ப் செட் கூட பார்க்க முடியாது . எனக்கு விவரம் தெரிந்து ஒருமுறை மட்டுமே தண்ணீர் பஞ்சம் வந்தது அதுவும் நிலத்தடி நீரினால் தீர்ந்தது . விவசாயம் மட்டும் பொய்த்தது .
வாழ்விலே ஒரு நாலாவது ஆற்றின் தொடக்கம் முதல் கடலிலே சங்கமிக்கும் இடம் வரை ஆகாய மார்க்கமாய் பார்க்க ஆசை , நிறைவேறுமா ???
