"தெரியுமாமா நம்ம மண்டையப் பெரியப்பா இறந்துட்டாரு" - அம்மா
"என்னமா சொல்ற எப்போ இறந்தாரு" - நான்
"நம்ம கோயிலுக்கு மார்கழி மாசம் நோம்பு போட்ருந்தோம்ல அப்போதான் இறந்துட்டாரு .காலைல நாலுமணிக்கு யாருக்கும் சொல்லாம கட்ளோட தூக்கிட்டுப் போய் மதவு பக்கத்துல புதைச்சுட்டானுவ."
"ஏம்மா அப்படி பண்ணாங்க நம்ம சுடுகாட்டுலேயே புதைச்சிருக்கலாம்ல ."
எனக்கு இந்த சாவும் அடக்கமும் புதியதாக இருந்தது .இதுவரைக்கும் இப்படி ஒன்று கேள்விபட்டதே இல்லை .ஊர் சுடுகாடு தாண்டி வேறு எங்கேயும் யாரையும் அடக்கம் பண்ணியதாக நியாபகம் இல்லை .
"எலா கோயிலுக்கு நோம்பு போட்டதுக்கு அப்புறம் ஊருக்குள்ள மேளசத்தம் கேக்கக் கூடாதில்ல . ஒப்பாரியும் வைக்க கூடாது .துஷ்டி விழுந்தா யாருக்கும் சொல்லாம கொள்ளாம இப்படித்தான் அடக்கம் பண்ணனும் .அவரு என்னா ஆட்டம் போட்டாரு கொஞ்சமா நஞ்சமா . அதான் இப்படி செத்து கொட்டு கூட இல்லாம போயிட்டாரு ."
எனக்கென்னவோ துளியும் சமாதானம் ஆகவில்லை .ஊருக்குள் இருக்கும் கோயில்களில் நித்த பூசை உண்டு .ஒரு சாவு விழுந்தாலும் மாலைக்குள் எடுத்துவிட வேண்டும் .எக்காரணம் கொண்டும் கோயில்களில் பூசை நிற்கக் கூடாது .அடக்கம் பண்ணுவதற்கு நேரம் ஆனாலும் பரவா இல்லை ஏழு மணிக்குள் அடக்கமும் கோயிலில் பூசையும் நடந்து விடும் .வெளியூர் ,வெளிநாடு என்று எவரும் போயிருக்காத காரணத்தால் மாலை தாண்டி எந்த வீட்டிலும் பிணம் இருந்து பார்த்ததில்லை .அப்படியே யாராவது வெளியூரில் இருந்தாலும் இழுத்துக் கொண்டிருக்கும்போதே தகவல் போய்விடும் .
ஐந்தாம் வகுப்புவரை உள்ளூர் பள்ளியில் படிப்பு .பள்ளி உணவு இடைவேளையில் இரண்டு கால பொழுதுபோக்கு வயல்களில் நாத்து நாடும் காலங்களில் வாத்து பிடிப்பது .உளுந்து ,பயறு போடும் காலங்களில் பயத்தங்காய் பறிப்பது . இங்கே காராமணி என்ற பெயர் பெற்ற தட்டைப்பயறு எங்கள் வயல் அருகில் ஒரே ஒரு வயலில்தான் போடுவர் .நீளமாக அப்படியே வாயில் வைத்து இழுத்தால் வந்து கொண்டே இருக்கும் .உளுந்தங்காய் அவித்து சாப்பிட மட்டுமே பிடிக்கும் .பச்சையாக ஆசைக்கு இரண்டு வேணா சாப்பிடலாம் .ஆனால் திகட்டாமல் சாப்பிடும் ஒரே காய் பயத்தங்காய் .(பாசி பருப்பு காய் ) . கை நிறைய செய்யது பீடி போல உருவி வைத்துக் கொண்டு அதுவும் ரக ராகமாய் அடுக்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவதென்றால் கொள்ள இஷ்டம் . குளத்தில் எண்ணற்ற வெண்தாமரைகளுக்கு நடுவில் ராணி போல நிற்கும் செந்தாமரை போலவே பயறு போட்ட வயல்கள் உளுந்து வயல்களுக்கு நடுவில் இருக்கும் .அதையெல்லாம் தேடி பிடித்து கண்ணம் வைப்பதும் ஒரு கலை . பள்ளி அருகிலேயே பயறு செழித்து வளர்ந்து இருப்பது நம்ம மண்டைய பெரியப்பா வயல்தான் . ஆசை அத்து மீற கையையும் தாண்டி பாவாடை எல்லாம் பயத்தங்காய் இருக்கும் . இன்னைக்கு செழிப்புதான்னு நினைச்சுகிட்டே வந்தோம்னா சரியா கவட்டை பக்கத்தில் பெரியப்பா காவலுக்கு நிற்பார் .(கவட்டை -ஆடு ,மாடு எதுவும் வயல் இருக்கும் பகுதிக்குள் உள்ளே போகாத படி மனிதர்கள் மட்டும் தாண்டி போகுமாறு குருவி அடிக்க பயன்படுத்தப்படும் வீ வடிவம் பெரிய மரக்கட்டை கொண்டு இங்கே இருக்கும் ). பெரியப்பாவை பார்த்த உடனே கால் வரை நடுங்கும் . பார்க்கத்தான் பெரிய மனுஷன் அவர் வயல் அன்றி ஊடுபயிராய் அங்கங்கே இருக்கும் சிலவற்றையும் சேர்த்து பறித்திருப்போம். அத்தனையையும் எங்களிடம் இருந்து பறித்துக் கொள்வார் . பையன்களின் சட்டை ,டிராயர் பெண்களின் பாவடைகளில் இருந்த எங்களின் மொத்த உழைப்பும் கண நேரத்தில் அவரின் சாரத்துக்கு இடம்பெயர்ந்திருக்கும் .
இப்படி எங்களையே குறி வைத்துக் கொண்டிருக்கும் அவரை எப்படி பழி வாங்குவது ?. அவர் எந்தக் கூடத்தில் இருந்தாலும் சரி எத்தனை பேருடன் பேசிக் கொண்டிருந்தாலும் சரி மொட்டை மண்டையா , அரைக் கை ,முழுக்கை ,வழுக்கை என்று கத்திவிட்டு ஒரே ஓட்டம் எடுப்போம் .அவர் திக்கித் திணறி எங்களை ஏசும்போது அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டோம் . அவர் இடுப்பளவு உயரம் கூட இல்லாத நாங்கள் அவரின் மானப் பிரச்சனைக்கு எதிரிகளானோம் .
கூட்டமாய் இருக்கும்போது அவரை வழுக்கை என்று திட்டியதால் கோயிலுக்கு போகும்போது அம்மா முந்தானைக்குள் தொலைந்து அவர் வாசல் கடப்பேன் .நாளடைவில் அவரின் நடமாட்டமும் குறைந்தது .அவரின் பையன்களும் எங்கே போனர் என்றே தெரியவில்லை . அவர் இறந்த செய்தி கேட்டு அதிலும் அவரின் அடக்க நிலை கேட்டு மனதே ஆறவில்லை . ஊரின் கட்டுப்பாடுகள் மேல் முதல் முறையாக கோவம் வந்தது .ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு பிறகு கிடைக்கும் இறுதி மரியாதை கூட அவருக்கு மறுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் .சில மாதங்கள் கழித்து ஊருக்கு போகும்போது அவரின் இடிந்த வீடு பார்கையில் என்னவோ மாதிரி இருந்தது .
அரைக்கை
முழுக்கை
வழுக்கை
சத்தமின்றி எனக்கு மட்டும் கேட்டது .
