


எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக்க எடுத்து என்னருகிலேயே பலநாட்களாய் அதுவும் தூங்கியது . வழக்கம் போல் போன ஞாயிறு அன்று ஏற்பட்ட ஒருமணிநேர பவர் கட் , புத்தகத்தை கையில் எடுக்க வைத்தது . ஆரம்பித்ததுமே வேகமாய் செல்ல ஆரம்பித்தது . யாளியைப் பற்றிய தேடல் வெளிநாட்டில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாத ஆரம்பம் . உண்மையை சொல்லவேண்டுமானால் புத்தகம் வாங்கும் வரை அந்த உயிரினத்தின் பெயர் யாளி என்று எனக்கும் தெரியாது . கதையில் அதைப் பற்றிய விசாரணைக்கு உட்படும் மனிதர்களைப் போலவேதான் நானும் இருந்தேன் . அது போதி தர்மர் பற்றிய அறிமுகத்தைப் போல் இருந்தது .
தமிழ்நாட்டின் பழமையான பெருங்கோயில்களில் இருக்கும் தூண்களில் கண்டிப்பாய் யாளி இருக்கும் . அடியில் யானையை வைத்து யாளியை பெரியதாய் செதுக்கி இருப்பர் . யாளி என்ற உயிரினம் ஒரு காலத்தில் இருந்ததா அல்லது அது ஒரு கற்பனை உயிரினமா என்ற கேள்விதான் கதை முழுக்க நம்முடனே பயணிக்கிறது . படிக்க படிக்க அதில் சொல்லப்பட்டவை போலவேதான் பல சந்தேகங்கள் மனதில் வருகின்றன . எப்படி கண்ணால் கூட பார்க்காத ஒரு உயிரினத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கோயில்களில் கொடுக்கப் பட்டிருக்கும் அதுவும் அத்தனை தத்ரூபமாய் இருக்கும் முப்பரிமாண சிலைகள் .
எங்கள் ஊர் சாஸ்தா கோயிலில் ஒரு பெரிய சாமி சிலை இருக்கும் எப்படியும் ஒரு பண்ணிரெண்டு அடி உயரத்தில் இருக்கும் . சாமிக்கு மாலை போட என அவருக்கு பின்னே படிக்கட்டுகள் வைத்திருப்பர் . சாமியின் பெயர் ஆழி . யாளி ,ஆழி உச்சரிப்பில் ஒரே மாதிரியே இருக்கின்றன . யாளி உருவத்தில் பெரிய விலங்கினம் அதாவது கோயில்களில் வடிமைக்கப்பட்டிருக்கும் சிலையின் அடிப்படையில் சொல்வதாய் இருந்தால் யானையைப்போல ஐந்து மடங்கு உருவத்தில் பெரியது . யாளியும் சரி சாமியும் சரி உருவத்தில் பெரியவர்கள் இதில் கூட ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது . யாளிதான் மருவி ஆழி யாய் ஆனதோ என்னவோ .இந்தப் பெயர் ஒற்றுமையைக் கூட எளிதில் ஒதுக்கவும் முடியாது . தமிழனின் பழமையான நாகரீகம் என்று சொல்லப்படும் ஆதிச்சநல்லூரில் கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பட்டயம் இன்றளவும் சில வகுப்பு மக்களிடம் திருமணத்தில் அது வழக்கில் உள்ளது . ஆதிச்சநல்லூர் சுற்றியுள்ள பகுதியில் இந்த பழக்கம் இருந்து நான் பார்த்ததில்லை . அதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட குதில்கள் போல் பல இன்றளவும் மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது . ஒரு குதிலின் வடிவமே இத்தனையாயிரம் ஆண்டுகளாய் அடுத்தடுத்த தலைமுறையினறினால் கடத்தி வரப்பட்டு இருக்கும்போது யாளி கூட கடத்தி வரப்பட்டு ஆழியாய் மாறியதோ என்னவோ .
கதையினூடே ஹீரோவின் உருவில் கதாசிரியர் மணி எதார்த்த இந்தியாவைப் பற்றி பேசுகிறார் . மக்களின் தொழில் அடிப்படையில் வந்த சாதி அமைப்பு அதன் அடிப்படையில் வந்த குடியிருப்புகள் என்று இலகுவாய் பெரிய விசயங்களை கடத்தி செல்கிறார் . அங்கங்கே வரும் வண்ணப்படங்கள் கதையின் வேகத்தை இன்னமும் கூட்டுகின்றன . எங்கே யாளி எங்கே யாளி என்று நம்மையும் காடு மலை என்று தேட வைக்கிறார் . உண்மையில் யாளி என்ற உயிரினம் இருந்திருக்குமா ? . நம் மூதாதையர் பல விசயங்களை நமக்கு கடத்தியது கல்வெட்டு மற்றும் கற்சிலைகள் மூலமாகத்தானே . அவற்றையெல்லாம் நம்பும் நாம் அதே சிலைகளில் தமிழகம் முழுக்க பரவிக்கிடக்கும் யாளியை மட்டும் கற்பனைச் சிலையாகவே எண்ணுகிறோம் .
ஒருவர் பார்த்து ஒருவர் என்று சிலைகள் வடித்திருந்தாலும் முதல் சிலை எந்த வகையில் வடிவமைக்கப் பட்டது வடித்தவர் யார் என்று படைத்தவரைத்தான் தேடுகிறது .யாருக்குத் தெரியும் ஒருகாலத்தில் டைனோசர் போலவே இதுவும் வாழ்ந்திருக்கலாம் . கதையில் வருவதுபோல் இதுவே டைனசராகவே கூட இருக்கலாம் . தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலக் கோயில்களில் மட்டுமே இச்சிலைகள் இருப்பதாய் மணி சொல்கிறார் . ஒருவர் கூடவா இதை பற்றிய தேடல் கொள்ளவில்லை .கடலில் புதைந்து போன லெமூரியாக் கண்டத்தைப் போல் நம் யாளியும் சிலைகளிலேயே புதையுண்டு போய்விட்டது . யாருக்குத் தெரியும் ஒரு காலத்தில் நம் யாளியும் ஒரு உயிரினமாய் இவ்வுலகுக்கு தெரிய வரலாம் . டையனோசர் தான் யாளியாகக் கூட இருக்கலாம் அப்படி ஒரு உண்மை இருந்தால் ஆதிச்சநல்லூர் மர்மம் போல நம் யாளியும் மறுபடியும் மண்ணுக்குள் புதைக்கப் படலாம் .தமிழன் சார்ந்த தீர்ப்புகள் ஒருபோதும் திருத்தப்படமாட்டாது .

