அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் .
முதன்முதலில் கை பிடித்து சிலேட்டில் எழுதப் பழகித் தந்த பொன்மணி டீச்சர் .சிலேட் முழுக்க முட்டை முட்டையாய் போட்டுக் கொண்டு கொடுக்க அதற்கு பத்துக்கு பத்து போட்டுக் கொடுக்கும் அழகே தனி . எல்லோரும் எழுதப் பழகியபின் தேர்வில் முட்டை வாங்குவர் .என் எழுத்து ஆரம்பித்ததே முட்டையில்தான். என் முதல் ஆசிரியர் அவரே .என் குழப்பமான பெயர் அவருக்குப் பின்னால் வந்த எந்த ஆசிரியருக்கும் அவ்வளவு எளிதில் வாயில் நுழையாது .என் பொன்மணி டீச்சர் மட்டும் நான் காலேஜ் போகும் வரையிலும் எங்கள் பள்ளியிலேயே இருந்ததால் அவ்வப்போது சந்திக்க நேர்கையிலும் என்ன மதார் எப்படி இருக்கே என்று அட்சர சுத்தமாக என் பெயரையும் அத்தனை வருடங்கள் மறக்காமல் உச்சரித்தவர் .
ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலமும் பத்தாம் வகுப்பில் அறிவியலும் எடுத்த லீலாவதி டீச்சர் . அதுவரை தனித்தனி தீவுகளாக இருந்த என் ஆங்கிலம் அப்போதுதான் காலனியாக உருமாறியது . ஒன்பதாம் வகுப்பா லீலாவதி டீச்சர் கூட்டெழுத்து எழுத வச்சே கொன்னுருவாங்க என்று மாணவர்களை தலை தெறிக்க ஒடவச்சவர் . அவரின் கைவண்ணம் இன்று வரை என் ஆங்கிலப் புலமையில் (எழுதுரதைச் சொன்னேங்க ) ஒளிர்கிறது . பத்தாம் வகுப்பில் அறிவியல் ,அவர் பாடம் எடுக்கும் முறையே வேறு .அவரின் புத்தகம் தவிர்த்து அனைவரின் புத்தகமும் மூடப் படும் . எல்லோர் கண்களும் அவரையே பார்க்க அந்த வகுப்பு முடியும்போது அவர் எடுத்தப் பாடமும் அப்படியே மனதில் பதிந்திருக்கும் .சூட்டோடு சூடாக அன்றைய இரவே படித்துவிட்டால் படிக்க என்ன இரண்டு முறை வாசித்தாலே போதும் மனப்பாடம் ஆகிவிடும் .அவ்வளவு எளிமையாக புரியும்படி பின்னாளில் எவரும் பாடம் எடுக்கவில்லை . நானும் பெண்ணாக இருந்த காரணத்தாலோ என்னவோ அவரின் மாணவி என்பதையும் தாண்டி அவரின் ரசிகையாகவே இருந்திருக்கிறேன் . நானெல்லாம் நடந்து வந்தாலே தரை அதிரும் . பொம்பளப் பிள்ளையா அடக்கமா மெதுவா நடந்து வர மாட்டியா என்று எத்தனையோ அறிவுரைகளை அடுத்த நொடியே காற்றில் பறக்க விடுபவள் . இவ்வளவு மென்மையாக எப்படி இவரால் மட்டும் நடக்க முடிகிறது என்று கண் கொட்டாமல் பல நாள் பார்த்திருக்கிறேன் . அவரின் ரசிகையாக இன்னொரு காரணம் அவரின் புடவை .எந்தப் புடவையுமே அவர் கட்டும் நேர்த்தியில் அழகாக மாறிவிடும் . அதையே ரசித்து தோழியிடம் சொல்லி அதை அவரும் பார்த்து பொய் சொல்லத் தெரியாமல் நானும் அவரிடம் உளறி மென்மையாக சிரித்துக் கொண்டே கடந்து சென்றார் .அவரின் சிரித்த முகம்தான் பலருக்கும் பல நேரங்களில் பதிலாக முடிந்திருக்கும் .
அதே பத்தாம் வகுப்பில் வரலாறையும் ,மண்ணையும் அதிகம் ரசிக்க வைத்தவர் செல்வம் சார் . அவர் உடலுக்கும் குரலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்காது .அவர் கீச்சு கீச்சு குரலை வைத்தே மாணவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாவார் .ஆனாலும் எதையும் பொருட் படுத்தாமல் வகுப்பெடுப்பதில் சிறந்தவர் . மாணவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் .ஒரு பாடம் பிடிக்க அந்தப் பாடம் எடுக்கும் ஆசிரியர் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் என்பதை முதன்முதலில் நான் உணர்ந்தது அவரிடம்தான் . நீ நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் அதுதான் எனக்குப் பெருமை என்று என் மீது அதீத நம்பிக்கை வைத்தவர் . எனக்காக படித்தேனோ இல்லையோ அவரின் நம்பிக்கைக்காகப் படித்தேன் . எத்தனை உலக வரைபடங்களும் ,இந்திய வரைபடங்களும் வைத்திருந்திருக்கிறேன் என்று பத்தாம் வகுப்பு முடியும் போதுதான் தெரிந்தது . எந்த வருடத்தில் என்ன நடந்தது ? எந்தப் பொருள் எங்கே கிடைக்கும் என்று விரல் நுனியில் வைத்திருக்கப் பழகியவர் .இன்றைக்கும் வரலாற்றுப் பாடத்தின் சிலப் பத்திகள் புத்தகத்தின் இடப் பக்கமா வலப்பக்கமா என்று சொல்லும் அளவுக்கு பாடம் எடுத்தவர் . ஸ்டாலினும் , ஹிட்லரும் ,அட்லியும் போலவே என் வரலாற்றில் மறக்க முடியாதவர் செல்வம் சார் .
ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் +1,+2 வகுப்புகள் . டீன் ஏஜ் குழப்பங்களுக்கும் நடுவில் வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுக்கும் முக்கிய காலங்கள் இந்த இரண்டு வருடங்கள் . ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் நகரத்து மாணவர்களுடன் போட்டி போட வேண்டிய தருணம் . சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளியில் தடை விதித்திருந்த காலத்தில் +1 விடுமுறையில் எங்களுக்கு (நண்பர்கள் ஐந்து பேர் ) பாடம் எடுக்க முடியுமா என்று வீடு தேடிப் போய் கேட்டவர்களை வெறுங்கையுடன் அனுப்பாமல் அவர் வீட்டில் வைத்து பாடம் எடுத்தவர் இயற்பியல் ஆசிரியர் திருநீலகண்டன் .பின்னாளில் இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து எங்களால் அவர் குற்றவாளிக் கூண்டில் ஏறியவர். பதின்மத்தின் சில விருப்பங்களில் தடுமாறிய நாட்களில் (தப்பு தப்பா யோசிக்காதீங்க வளையலும் ,ஸ்டிக்கர் பொட்டும்தான்) கவனம் இப்போ உனக்கு படிப்பில் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் விட வைத்து சந்நியாசி வாழ்கைக்கு மாற வைத்தவர் . கலர் கலரா பொட்டும் ,வளையலும் போடும் பழக்கம் போய் அரக்கு பொட்டுக்கும் வெறுங்கைக்கும் அன்று மாறியவள்தான் இன்று வரை கண்ணாடி வளையல் என் கைகளைத் தொடவே இல்லை .வெறுங்கையுடன் ஒரு வைராக்கியத்தில் இருந்தவள் மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் சம்பளத்தில் வாங்கிய தங்கச் சங்கிலி அந்த வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது .
நீ என்னவாகப் போகிறாய் என்றவரிடம் பொறியாளராய் வரணும் சார் என்று எந்த வாய் முகூர்த்தத்தில் சொன்னேனோ அடுத்த வருடமே பழித்தது . மேற்படிப்புக்கான திட்டமிடல் ,அதைப் பற்றிய தகவல்கள் என்று இயற்பியல் ஆசிரியர் என்பதையும் தாண்டி உற்ற நண்பனாய் தக்க நேரத்தில் வழி காட்டியவர் . சமீபத்தில் பள்ளி விடுமுறை மாதமான ஏப்ரலில் பள்ளியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . சிறப்பு வகுப்பு போய்க் கொண்டிருந்தது .எங்களுக்கு மறுக்கப் பட்ட ஒன்று இவர்களுக்காவது கிடைத்ததே என்றுதான் அக்கணம் மனதுக்குள் ஓடியது . உங்களை மாதிரி இல்லப்பா இப்போலாம் பசங்க ரொம்ப மாறிட்டாங்க யாரும் சொல் பேச்சு கேட்கிறது இல்லை என்று வருத்தத்துடனே பகிர்ந்து கொண்டார் .கேட்கவே ஒருமாதிரி இருந்தது .வேறு எங்கேயும் பார்க்கக் கூடாது , என்னை பாருங்க என்று பார்வையை அவரை விட்டு அவர் கண்களை விட்டு நகராமல் இருக்க வைத்தவர் . அந்தப் பயிற்சிதானோ என்னவோ இன்றளவும் எதிராளியின் கண்களை பார்த்துப் பேசும் பழக்கம் தொடர்கிறது .சமயங்களில் அது பலரின் இன்னொரு முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது .கூடப் படித்த ஆண் ,பெண் நண்பர்களை ப்பா போட்டு அழைக்கும் பழக்கம் தொற்றியதும் இவரிடமிருந்துதான் . நான் உனக்கு என்ன அப்பாவா என்னப்பா சொல்லுப்பா இப்படியே சொல்ற என்று கடிந்து கொண்ட கல்லூரி நண்பன் (அவனுக்கே இது மறந்து போயிருக்கும் ) உனக்கான பதில் "சாரிப்பா எல்லாத்துக்கும் இவர்தான்ப்பா காரணம் ".
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் (பள்ளி நாட்களில் தவறாமல் ஒவ்வொரு ஆசிரியராலும் உச்சரிக்கப் படும் வாசகம் ) என்னைச் செதுக்கியவர்களில் இந்த நால்வரும் சிற்பிகள் என்று என்றைக்கும் மறக்காமல் சொல்வேன் .


