சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலும் பல IT நிறுவனங்களின் கூடாரமாகவும் இருப்பதால் அந்த ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு எப்போதும் பஞ்சமே இருப்பதில்லை .டைடல் பார்க் சிக்னல் புதிதாய் அந்த இடத்தை கடப்பவருக்கு குழப்பமே வரும் அந்த அளவு கொஞ்சம் சிக்கலான சிக்னல் அது .பறக்கும் ட்ரெயின் வந்தபின் அந்த இடத்தின் மக்கள் கூட்டம் கேட்கவே வேண்டாம் .டைடல் பார்க் ஊழியர்கள் பறக்கும் ட்ரெயின் ஸ்டேசனை எந்த சிக்னலுக்கும் காத்திருக்காமல் இலகுவாய் தரை உயர பாலத்தை (பூட் OVER BRIDGE )பயன்படுத்தி நேராய் ஸ்டேசனின் இரண்டாம் தளத்துக்கே செல்ல முடியும் . அவர்களைத் தவிர மற்றவர்கள் சிக்னலுக்கு காத்திருந்து ஒருஒரு சாலையையும் கவனித்து கடந்து முடிப்பதற்குள் அதிகபட்சம் பத்து நிமிடங்களாவது ஆகும் . OMR இல் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் வந்துகொண்டே இருப்பதைப் பார்த்தால் நம் பொறுமையே போய்விடும் .அத்தனைக்கும் காத்திருந்து ஒரு சாலையைக் கடந்து மீண்டும் நடு ரோட்டில் நிற்க வேண்டும் .திருவான்மியூர் இல் இருந்து மத்திய கைலாஷ் வழி சாலை சிக்னல் ஓபன் ஆகும் .இந்த இரண்டு சாலைகளையும் கடக்கும் நேரத்தில் நாம் போக வேண்டிய பேரூந்து காலியாய் அடுத்தடுத்து சென்று நம் வயித்தெரிச்சலை வேறு கிளப்பும் .நடு ரோட்டில் நின்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .அத்தனையும் தாண்டி அக்கரையில் இருந்து இக்கரை வருவதற்குள் பாதி உயிர் போய்விடும் .
அடுத்து நமக்கான பேரூந்து ஒரு அரை மணி நேரம் கழித்து இதோ வந்துட்டேன் என்று சொல்லி நம் முன் நிற்கையில் ஏறவா வேண்டாமா என்று சிந்திக்க வைக்குமளவுக்கு அங்கு ஏற்கனவே கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும் .அடுத்து அதில் ஏறவும் ஒரு பெருங்கூட்டம் நம் கூடவே காத்திருக்கும் .ஆபீஸ் டார்ச்சரை விட வீடு வந்து சேருவதற்குள் வரும் இந்த மாலை நேர டார்ச்சர் பற்றி சொல்லி மாளாது .இதில் பழக்கப்பட்டவர்கள் சரியாய் சிக்னல் பார்த்து கடந்து விடுவர் .புதிதாய் அந்த இடத்துக்கு வருபவர் கொஞ்சம் திணறித்தான் போவர் அதிலும் ஸ்டேசனில் இருந்து SRP TOOLS வழி செல்லும் பேரூந்து நிறுத்தத்தை அடைய கடப்பவர்கள் OMR - திருவான்மியூர் சாலை சிக்னலை மட்டுமே பார்த்து வேகமாய் கடக்க முற்படுவர் .அங்கே வலப்புறம் மத்திய கைலாஷ் - OMR சிக்னல் அடைபட்டிருக்கும் ஆனாலும் மத்திய கைலாஷ் - திருவான்மியூர் செல்லும் சாலைக்கு சிக்னல் கிடையாது அதில் வாகனங்கள் எப்போதுமே சென்று கொண்டிருக்கும் .இங்கிருந்து கடக்கும் வேகத்தில் அந்த சாலையை பலர் கவனிப்பதில்லை .
ஒருமுறை வழக்கம் போல் ஸ்டேசனில் இருந்து சாலையை கடக்க வருகையில் கூடவே வந்தவன் மொபைலில் "சொல்லுடா எந்த ஸ்டாப் என்று சொல்லி டிக்கெட் வாங்கணும் " இப்படி அவன் கேட்கையிலே பையன் புதுசு போல என்று தெரிந்தது .வேகவேகமாய் அவன் ரோடு கடக்க எத்தனிக்கையில் சட்டென்று அவன் கை பிடித்து நான் நிறுத்த அவன் சந்தேகமாய் எனைப் பார்க்க வேகமாய் மத்திய கைலாஷ் -திருவான்மியூர் சாலையில் ஒரு கார் அவன் முன்னே வழுக்கிக் கொண்டு சென்றது .காரின் வேகத்துக்கு அவனிடம் சொல்லி நிறுத்த நேரமில்லை. மூளைக்கு செய்தி போய் அது உறுப்புகளுக்கு கட்டளையிடும் நேரத்துக்கும் குறைந்த நேரமே அப்போது இருந்தது . அனிச்சைசெயல் அவன் அந்நியன் ஒரு ஆண் என்பதெல்லாம் பார்க்கவில்லை .அவன் பார்வைக்கு நான் பதிலேதும் சொல்லாமலே அவனை கடந்து போய்க் கொண்டே இருந்தேன் .புது இடம் நிறைய சாலைகளின் இணைப்பு கொஞ்சம் சிக்கலான சிக்னல் வேறு இதில் காதில் மொபைல் .பழக்கப் படாத சிக்னல்களில் ஒரு நிமிடம் நின்று சிக்னல் எப்படி இருக்கிறது எந்தந்த சாலைகள் எங்கே போகிறது என்று கொஞ்சம் பார்த்துவிட்டுத்தான் கடந்து சென்றால் என்ன. .
தினம்தினம் கூட்டம் கூட்டமாய் மக்கள் அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர் .அங்கு ஒரு சுரங்கப் பாதையோ அல்லது தரை மேல் பாலமோ போட்டால்தான் என்ன?. சுரங்கப் பாதையைவிடவும் தரை மேல் பாலம் கட்டுமான பொருட் செலவும் ,நேரமும் குறைவு .அதன் மூலம் சில உயிரிழப்புகளும் ,விபத்துகளும் தவிர்க்கலாமே .காத்திருக்கும் நேரமும் குறையும் .அசன்ட்டாஸ் ரோடு பளபளக்கையில் அன்றாடங்காட்சிகள் மற்றும் அதிக பொதுமக்கள் பயன்படுத்தும் தரமணி ரோடு பல்லிளித்துக் கொண்டிருக்கும் .மழைக்காலங்களில் பட்ட துயர் அங்கே பயணித்த மக்களுக்கே தெரியும் .ஒருவழியாய் மழை ஓய்ந்த பின் ஒரு ரோடு மட்டும் தற்சமயம் சரி செய்யப் பட்டுள்ளது .இப்போது அதுபோலவேதான் இங்கும் நடக்கிறது .டைடல் பார்க் ஊழியர்களின் உயிர் மட்டும்தான் விலை மதிப்பற்றதா. OMR சாலையில் பல இடங்களில் Foot over Bridge பயன்படுத்தப் படாமல் துருபிடித்துக் கொண்டிருக்கிறது .தேவைப் படும் இடங்களில் அந்த தரை மேல் பாலத்தை போட்டால் தான் என்ன .முக்கியத்துவம் கருதி திட்டங்கள் செயல்படுத்தப் படும் காலம் எப்போதுதான் வருமோ ?
