எப்போ அத்தே ஊருக்கு வருவ? என் அண்ணன் பையனிடமிருந்து வந்தக் கேள்வி இது . கேக்கும்போது கொஞ்சம் கண்களில் கண்ணீர் . அவனுக்கு இப்போ 7 வயசு . நான் காலேஜ் படிக்கும்போது , சென்னை வந்ததிலிருந்து வீட்டுக்கு போகும்போதெல்லாம் எனக்கும் அவனுக்கும் சண்டை வரும் . முக்கியமா டிவி ரிமோட் சண்டை . அவன் அதை எடுத்து மறைத்து வைக்க அவனிடமிருந்து நான் பிடுங்க .சில நேரம் என்னை தேட விட்ருவான் .
வீட்டிலே நான் கடைசிப் பிள்ளை என்பதால் மற்றவர்களின் அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் பழகியே வந்த எனக்கு நான் அதிகாரம் பண்ண அவன் கிடைச்சான் . பெரும்பாலும் எங்களுக்குள் ரிமோட் சண்டைதான் வரும் . 4 நாள் விடுமுறையில் ஊருக்குப் போனா முதல் நாள் " ஐ எங்க அத்த வந்துட்டா" . இரண்டாம் நாள் "அத்த நீ எப்போ தூங்குவ ?" நான் சொல்லிருப்பேன் நான் தூங்கின பிறகு நீ சுட்டி டிவி பாரென்று . பாதி நேரம் தூங்கியே கழிப்பேன் . அவனும் பொறுமையா இருப்பான் . கொஞ்ச நேரம் போன பிறகு"எண்ணப நீ மட்டும் டிவி பாக்குற , என் சானெல் வைக்க மாட்டேங்குற ? " என்று கெஞ்சுவான் , நான் காதிலேயே வாங்கமாட்டேன் . அழ ஆரம்பிச்சுருவான் . அவனுக்கு என்ன பிடிக்குதோ அதத்தான் நாம பாக்கணும் அது விளம்பரமா இருந்தாலும் . உடனே எனக்கு கோவம் வரும் " என்னல எப்போ பார்த்தாலும் சுட்டி டிவி பாக்குற ? (நான் +2 வரைக்குமே கார்டூன் பார்த்துருக்கேன்) . சில நேரம் ரிமோட் குடுத்து தூங்க போய்டுவேன் . மூன்றாவது நாள் "அத்த நீ எப்போ ஊருக்கு போவ ?" , நான் "எதுக்குல கேக்குற ? " ம்ம் டிவி பாக்கணும் .
பல தடவ எங்களுக்குள் சண்டை நடக்கும்போது என் அம்மா "அவன்கிட்ட போய் சண்டை போடுறியே " ஏன் அவன அழ வைக்க . அப்போ அவனுக்கு வயசு 6 , எனக்கு அவன விட 4 மடங்கு வயசு . நானும் கொஞ்சம் பாரபட்சத்தோடதான் நடந்திருக்கேன் . அவன் தங்கச்சினா எனக்கு உயிர் . அதுவும் என்கிட்டே அவ்ளோ பாசம் . என் அம்மா , அண்ணா எல்லாம் அவளுக்கு மருந்து குடுக்க போராடும்போது நான் குட்டிம்மா வாய் காட்டு குடிசுருமானு என் கையால குடுத்தா எதிர்ப்பு காட்டாம அப்படியே நான் சொல்றத செய்வா, அண்ணாவும் அப்படி என்னல உன்கிட்ட இருக்கு இது இப்படி இருக்கு உன்கிட்டனு அதிசயமா கேட்பான் , எனக்கும் தெரியல. (பெரியவங்களுக்கு எல்லாம் நான் திமிர் பிடிச்ச பொண்ணா தெரிவேன் முதல் பார்வையில் , குழந்தைங்க என்கிட்டே அவ்ளோ ஒட்டிப்பாங்க ) .
இவன் மேல பாசம் உண்டு ஆனா கொஞ்சம் கண்டிப்பும் . ஒருநாள் நடந்த ஒன்று என்னையே மாத்திடுச்சு . அப்போ நான் வீட்ல இருந்த சமயம் குலசை திருவிழா . வேஷம் போட்ட சாமிங்க எல்லாம் வீட்டுக்கு வருவாங்க . இவனும் காணிக்கை போட்டு விபூதி வாங்கிருக்கான் . நான் வழக்கம் போல தூங்கிட்டு இருக்கேன் . இவன் வந்து அத்த கை எடுன்னு சொல்லி என் நெத்தில விபூதி பூசுரான் . அந்த நொடி என்மேல எனக்கே வெறுப்பு வந்தது . ஒரு சின்னப் பையன் கிட்ட இருக்குற குணம்கூட எனக்கு இல்லாம போயிடுச்சேன்னு. அதுக்கு பிறகு எங்களுக்குள்ள ரிமோட் சண்டை வந்தது இல்ல . இப்போ நானும் அவன்கூட டோராவின் பயணம் பாக்குறேன் .எப்போ நான் வீட்டுக்கு போனாலும் நான்தான் அவன குளிக்க வைப்பேன் . இப்போலாம் வெக்கப் படுறான், அவனுக்குத் தெரியுமா எத்தனை வயதானாலும் அவன் எனக்கு குழந்தை என்று ? .அவன் 8 மணிக்கே தூங்கிடுவான், பெரும்பாலும் நான் போன் பண்றதே 9 க்கு மேலதான் .போன வாரம் போன்ல பேசும்போது,என்னல நான் போன் பண்ணும்போதெல்லாம் தூங்கிடுற , எத்தனை மணிக்கு நீ தூங்குற என்று கேட்க ,"அதுவா நான் 1 மணிக்கே தூங்கிடுவேன் " னு சொல்லும்போது அவன் குழந்தைத்தனம் . சரில அத்தை வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரணும் ? கேட்டா அவன் பதில் "எனக்கு சப்போட்டா பழம் , முறுக்கு இப்படித்தான் அவன் லிஸ்ட் போகும் . சப்போட்டா பழம் அவனுக்கு 3 வயசுல இருந்து நான் பழக்கிவிட்டது .அப்பா , அண்ணா வாங்கி குடுத்தாலும் பெரும்பாலும் அவனுடைய லிஸ்ட் என்னிடம் இதுவாகத்தான் இருக்கும் . நானும் அவன் கேட்டது எல்லாமே வாங்கி குடுத்துடுவேன் .( எனக்கு சின்ன வயசுல இந்த மாதிரி அத்தைங்க இல்லியே ? அவங்களுக்கும் கல்யாணம் ஆய்டுச்சு .)
அம்மா திட்றாங்க ஏன் வரும்போதெல்லாம் டிரஸ் வாங்கிட்டு வர வீடு முழுக்க நீ வாங்கிட்டு வந்ததுதான் இருக்கு . அம்மாகிட்ட சொல்லிட்டேன் எனக்கு கல்யாணம் ஆகுற வர நாந்தான் இவங்களுக்கு வாங்கித் தருவேன் அதை நீ ஏதும் சொல்லகூடாதுன்னு . 3 பேரு என்ன அத்தைன்னு கூப்பிட இங்கிருக்கும் சின்ன அண்ணா பொண்ணு மட்டும் ஆன்டி என்று கூப்பிடும்போது அந்த அத்தை பாசம் கொஞ்சம் மிஸ்ஸிங் . என்ன பண்ண அவளை அப்படியே வளர்த்துட்டாங்க . இப்போ பொறந்து 7 மாசமே ஆன குட்டி சிவாகிட்ட "என்னல அத்தை பாத்து அழற , அப்புறம் அத்தை உன்ன பாக்க வர மாட்டேன்" என்று அவங்க ஆன்டி கத்து கொடுக்குமுன் நான் அத்தை சொல்லிகுடுக்குறேன் . வேளைக்கு வந்த பிறகு வந்த முதல் தீபாவளியில் அம்மா , அப்பா , அக்கா , பெரியண்ணா , சின்ன அண்ணா குடும்பம் என்று ஒருவர் விடாமல் புது டிரஸ் என்னுடைய சம்பளத்தில் வாங்கி குடுக்கும்போது என் அம்மா கண்ல வந்த கண்ணீர் .( இதுவரைக்கும் நீங்க வாங்கி குடுக்கலனா இதுக்கு பிறகாவது வாங்கி குடுங்க . நாம வாங்கி குடுக்குற ஒரு கதர் துணி கூட பெத்தவங்களுக்கு பட்டுதான். ) அதன் பிறகு வந்த தீபாவளியில் எல்லாம் குட்டீஸ்க்கு மட்டும்தான் டிரஸ் . அதுவே 4 பேருங்க . இப்போ புது குட்டி வந்து 5 ஆய்டுச்சு .
அடுத்த மாசம் ஊருக்கு மறுபடியும் புதுத்துணியுடன் , 3 பேரையும் நானே குளிக்க வச்சு என் கையால போட்டு விடனும் . இன்னமும் அவன்கிட்ட சொல்லல நீங்களும் அதுவரைக்கும் சொல்லாதீங்க . கண்டிப்பா ரிமோட் சண்டையும் போட மாட்டேன் . உங்க மேல சத்தியம் .
