"அண்ணா நீ பேசுறது சரியாவே கேட்கல கொஞ்சம் வெளில வந்து பேசு " என்றேன்
"ஏலே இங்கே இராப்பகலா மழை பெஞ்சுட்டு இருக்கு வெளில வர முடியாது " என்றான் பெரியண்ணா
"என்ன அடைமழை பெய்தா அப்போ நம்ம குளம் தெப்பிடுச்சா"
"இல்ல இன்னும் இரண்டு நாள் மழை பெஞ்சதுன்னா குளம் தெப்பிடும் அப்புறம் கொஞ்சம் உடைச்சு விட்டாதான் கரை தப்பும் "
ஆமாம் எங்க ஊர் குளம் , குளம் என்று கூட அதை சொல்ல முடியாது ஏரி என்றே தாராளமாய் சொல்லலாம் ஆங்கிலேயர் காலத்தில் சிறந்த திட்டமிடுதலில் வெட்டப்பட்ட குளமது. எப்படியும் ஒரு நூறு ஆண்டுகள் இருக்கும் சின்ன வயதில் ஒரு கல்லில் குளம் வெட்டப் பட்ட ஆண்டு 1886 என்று பார்த்ததாய் நியாபகம் . அவர்கள் கட்டி வைத்த இருபதடி உயர கற்சுவர் ஒன்று உடைந்தாலே போதும் மொத்த ஊரும் அடித்துச் செல்லப்படும் . அதில் இடையிடையே இருக்கும் கற்களில் ஓடி பிடித்து ஏறி இறங்கி விளையாடி இருக்கிறேன் இப்போது தூரத்தில் இருந்து பார்த்தாலே இந்த சுவற்றிலா நாம் பயமின்றி ஏறினோம் என்றிருக்கும் . வருடா வருடம் அடைமழை பெய்கையில் அணையிலிருந்து திறந்துவிடப் படும் தண்ணீர் சுற்றுவட்டார தண்ணீர் என்று குளம் நிரம்பி வெள்ளம் வரும் ஆனால் ஊருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது அந்த வகையில் குள அமைப்பு இருக்கும் . உபரித் தண்ணீர் வெளியேறும் வகையில் ஒதுக்குபுறமாய் ஒரு கால்வாய் போகும் அதை நம்பியே பல கிராமங்களில் விவசாயம் நடக்கும் . குளம் உடைத்துவிடாமல் இருக்க ஒருபுறம் இருக்கும் தாழ்வான பகுதியில் சில கற்களை ஊர் ஆண்கள் எடுத்து விடுவர், உபரி நீர் அதுவழியாய் வெளி ஏறிவிடும் . குளம் நிறைந்து வழிகையில் அதில் நீந்திக் குளிப்பது சுகமே சுகம் எல்லாம் சின்ன வயசோடு முடிஞ்சு போச்சு .
![]() |
| தலைமதகு ஒரு 15 அடி ஆழம் கொஞ்சம் பயந்துகொண்டேதான் போட்டோ எடுத்தேன் .சிலமணி நேரம் முன்பே இதனுள் ஒருவர் விழுந்து காப்பாற்றப்பட்டார் . |
![]() |
| அக்கரை தொலைவில் 6 km அடுத்து |
![]() |
| தொலைவில் தெரிவது 20 அடி உயர கற்சுவர் வெளிப்புறம் |
![]() |
| கற்சுவரின் உட்புறம் குளம் நிரம்பி இருக்கு அதில் ஒரு 5 அடி ஆகல நடை பாதை உண்டு இதில் ஒரு படத்தின் பாடல் காட்சி கொளுத்தும் வெயிலில் எடுக்கப்பட்டது பாவம் நடனம் ஆடியவர்கள் |
"போன வாரம் நான் பேசும்போது வயலுக்கு நாத்து பாவிருக்கிறதா சொன்னியே "
"ஆமால இங்கே இருக்கிற வயலுக்கு நாத்து போட்டாச்சு கீழ வயலுக்கு மட்டும் இரண்டு நாள்ல போடணும் "
"மழை வருதே நம்ம வயல் நாத்து தண்ணில அடிச்சுட்டு போய்டாது தண்ணி வடிஞ்சுருமா ?"
"அதெல்லாம் போகாது தண்ணி வடிஞ்சுரும் "
"சரி அப்படியே போனாதான் என்ன இரண்டு மரக்கா நெல்லுதானே "
"என்னது இரண்டு மரக்கா நெல்லா ? கீழ வயலுக்கு மட்டும் 20 மரக்கா நெல்லுல "
"என்னது இருபது மரக்காயா"
கொஞ்சம் வெட்கமா போய்டுச்சு இது கூட தெரியாம இத்தனை நாளா இருந்திருக்கேன் . இன்னைக்கு கண்டிப்பா தெளிவா கேட்டுடணும் என்று தொடர்ந்தேன் .
"இருபது மரக்கா எப்படினா வரும் நாத்துக்கு "
"ஏல............ குருனிக்கு ஒரு மரக்கா நாத்து போடணும் நமக்கு கீழ வயலுக்கு மட்டும் 21 மரக்கா வயப்பாடுக்கு இருபது மரக்கா நாத்து போடுவோம் "
"நீ குட்டி குட்டியா சாக்குல விதை நெல்லு கட்டிதான் பார்த்திருக்கேன் இருபது மரக்கா மொத்தமா பார்த்தது இல்லியே ?"
"ஆமால நாலு நாலு மரக்காவா ஒரு சாக்குல கட்டுவோம் "
அப்பாடா ஒருவழியா எவ்வளவு நெல் நாத்துக்கு மட்டும் தேவை என்று அன்று தெரிந்து கொண்டேன் . சின்ன வயதில் உனக்கு என்னப்பா மேனி போய்டுச்சு என்பர் . சிலர் முக்கா மேனிதான் போயிருக்கு நிறைய சாவி விழுந்துடுச்சு என்பர் . அப்போ மேனி என்றால் என்ன என்றும் தெரியாது . அந்த சந்தேகம் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் . பொதுவாய் விலை நிலங்களை ஏக்கரில் சொல்வர் ஆனால் எங்கள் பக்கம் எல்லாம் குருணி , மரக்கா வயப்பாடு என்றே சொல்வோம் .ஒரு ஏக்கருக்கு 12 மரக்கா வயப்பாடு (வயல் ) மேனி என்றால் விளைந்த நெல் ஒரு மரக்கா வயப்பாடுக்கு ஒரு கோட்டை(100 kg ) என இருக்க வேண்டும் . இதை எடை பார்த்து தெரிந்து கொள்வதை விட அடுக்கி வைத்திருக்கும் நெல் மூடைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம் . ஒரு சணல் மூடை 50 kg எடை இருக்கும் . சாவி என்பது நெல் பால் பிடிக்கும் காலம் என்று ஒன்று வரும் அப்பொழுது சரியாய் பால் பிடிக்காமல் பொய்த்துப் போன நெல்மணிகளே . சில நேரங்களில் சரியான நேரத்தில் பூச்சு மருந்து அடிக்காமல் போனாலும் இது வரும் .
களைக்கும் பயிருக்கும் வித்தியாசம் தெரியாமல் நானும் களை எடுக்கிறேன் என்று பயிரை பிடுங்கி எடுத்து அம்மா இது களையா என்று கேட்டு திட்டு வாங்கிய காலமும் உண்டு . களை எடுத்தலுக்கும் புல்லரித்தலுக்கும் வித்தியாசம் தெரியாமல் களை எடுக்கும் நேரம் புல்லரிக்கப் போவதாய் சொல்லி திருட்டு முழி முழித்ததும் உண்டு .விவசாயம் அது ஒரு சுவாரசியம் . இன்னும் தொடரும் ................




