வீட்டில் இருக்கும்போதே தோசை என்றால் பிடிக்காது . அம்மாதான் வெறும் ஆவில வேகுற இட்லி சாப்டுற என்னில வேகுற தோசை வேணாமா என்ன பிள்ளை நீ என்று சொல்வாங்க . ஹாஸ்டல் போனேன் சாதா தோசை , ரவா தோசை , மசாலா தோசை என வாரத்தில் நான்கு முறை தோசை .இதில் எல்லா தோசைக்கும் வைக்கும் சாம்பார் என்னவோ ஒன்றுதான் . மெஸ் மாஸ்டர் முதல் அங்கிருக்கும் பெண்கள் வரை நமக்கு பிரெண்ட் , அதான் பேசியே மயக்கிடுவோமே .மெஸ் உள்ளே நமக்கு தாராள மரியாதை உண்டு வெள்ளி இரவு இருக்கும் சாதா தோசைக்கு மெஸ்ஸில் இருக்கும் தக்காளி , வெங்காயம் , பச்சைமிளகாய் , உப்பு கொண்டு நான் செய்யும் பச்சடி அங்கிருக்கும் சாம்பாரைவிட தோசைக்கு நல்லா இருக்கும் .என்ன என் பிரெண்ட்ஸ் செஞ்சவளுக்கும் கொஞ்சம் குடுப்போமே என்று நினைக்கும் பெரிய ஆட்கள் அல்ல . நான் தோசை எடுத்துவிட்டு திரும்பும் முன் வெற்று டிபன் பாக்ஸ் தான் இருக்கும் .
சனிக்கிழமை காலை ரவா தோசை அது வாங்க வரிசையில் நிற்கும் நேரத்துக்கு நான் பஸ் ஏறினால் என் வீட்டுக்கு போய்டலாம் . அந்த தோசை சுட மாஸ்டர் விளக்குமாறை எண்ணையில் தொட்டு அந்த பெரிய தோசக் கல்லை கொஞ்சம் கூட்டி எடுத்து மாவு ஊத்தி தோசை சுடும் அழகே தனி . என்னோட பாவரைட் தோசை அது வாங்க வரிசையில் நிற்க வேண்டும் . நாம் முதலாவது அல்லது இரண்டாவது வருடம் படிக்கும் மாணவியாகும் பட்சத்தில் வரிசையில் நிற்க ரொம்பவே பொறுமை வேண்டும் . மூன்றாவது , நான்காவது படிக்கும் மாணவியர் வந்து அவர்கள் பாட்டுக்கு முன்னே போய் வாங்குவர் நாம் பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் .அடுத்த நாள் சண்டே காலையில் மசால் தோசை இதுவும் வரிசையில் நின்றே வாங்க வேண்டும் . தோசைக்கு நடுவில் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலா கலவை சூப்பர் டேஸ்ட் . இரண்டு தோசை போதும் போதுமென்கிற அளவுக்கு வயிறு நிறையும் . மதியம் இருக்கும் அவியல் சாப்பாடு சாப்பிட எப்படியும் மணி மூன்று ஆகும் .
எங்கள் மசால் தோசைக்கு இன்னொரு பெயர் மயக்க தோசை .சாப்பிட்ட அரை மணிநேரத்தில் நித்திரா தேவி நம்மை அழைக்கும் . தூக்க மாத்திரையே போடாமல் இதமான தூக்கத்துக்கு எங்கள் ஹாஸ்டல் மசால் தோசை இரண்டு போதும் .வழக்கமான நேரங்களிலேயே நான் ஒரு தோசைதான் சாப்பிடுவேன் அதுக்கே எப்படியும் ஒருமணி நேரம் தூங்கிடுவேன் . எக்ஸாம் நேரமென்றால் அரை தோசைதான் நிறைய படிக்க வேண்டும் என்றால் முன்னிரவே இரண்டு வாழைப் பழம் எடுத்து வச்சுடுவேன் காலையில் பாலும் பழமும் கொஞ்ச சீக்கிரமே லஞ்ச் சாப்பிடுவேன் தூக்க மாத்திரை தோசைக்கு கட் சொல்லிடுவேன் . என் ரூம் மேட் சாப்பிட்டு வருவா , முதலில் உக்காந்து படிப்பா அப்புறம் ஒரு பத்து நிமிடத்தில் மெதுவா படுத்துக் கொண்டே படிப்பா நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் எப்படியும் இரண்டு தோசைக்கு தூங்கணுமே ? அடுத்த பத்து நிமிடத்தில் புக் ஒருபுறமும் அவள் ஒருபுறமும் ரெஸ்ட் எடுப்பர் அதேதான் ஆப்பரேசன் சக்சஸ் . இரண்டு தோசை எப்படியும் இரண்டுமணி நேரம் தூங்கனும் இல்லேன்னா படிக்கவே முடியாது .
நாங்கள் நான்காவது ஆண்டு வந்தவுடன் முதல் வேலை ரவா தோசையை தூக்கினதுதான் . அதிக நேரம் நிற்க வேண்டி இருப்பதால் மெனுவில் இருந்து ரவா தோசைக்கு குட்பாய் சொல்லியாச்சு . அரசுக் கல்லூரி என்றாலும் விடுதியைப் பொறுத்த வரையில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் .ஒவ்வொரு வருடமும் மெனு லிஸ்ட் தயார் பண்ணுவதும் நான்காம் ஆண்டு மாணவியர் தான் . சட்னியில் உப்பில்லை என்றாலும் என்ன மாஸ்டர் உப்பிலே என்று தைரியமாய் கேட்க முடியும் .போராட்டமில்லா வாழ்க்கை ஏது, நாங்களும் போராட்டம் செய்து ரௌடி என்று நிரூபிக்க ஒரு நேரம் வந்தது .ஒருநாள் ஏதோ திடிரென்று காலையில் சாப்பிட எதுவுமே ஹாஸ்டலில் ரெடி பண்ணவில்லை அத்தனை மாணவியரும் பட்டினி . விடுதி அலுவலகம் முன்பு எல்லோருமே உக்காந்து போராட்டம் யாருமே கிளாஸ் போகல . இருந்த இடத்துக்கு உடனே தேடி வந்தது ப்ரெட் ஜாம் . இப்படியே தோசை தோசை என்று வெறுத்துப் போய் வெளி இடங்கள் சென்றாலே தோசை தவிர எது வேண்டுமானாலும் சாப்பிடத் தொடங்கினேன் . எத்தனை நாளைக்கு தப்பிக்க முடியும் இப்பொழுது இருக்கும் ரூம் நான் வந்து சேர்ந்த போது வாரத்தில் குறைந்தது நான்கு இரவுகள் தோசை வெறுத்துப் போய்ட்டேன். அந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க ஒருவழியாய் எப்படியோ எல்லோரையும் சமைக்க பழக்கிட்டேன் தோசைக் கொடுமை கொஞ்சம் குறைந்தது .
மாத பட்ஜெட்டில் எப்படியும் தோசை பொடிக்கு ஒரு அமௌன்ட் இருக்கும் . வேலையே இல்லாத சாப்பாடு மாவு ரெடி மேட் வாங்கினோமா தோசை சுட்டோமா பொடியை வச்சு சாப்பிட்டோமா என்று இருக்கும் . இவங்களை இப்படியே விட்டா நல்லா இருக்காது என்று தோசை பொடி வாங்குவதை குறைத்துக் கொண்டேன் . அப்படியே இருந்திருக்கணும் போன மாசம் நாமலே தோசைப் பொடி செய்வோமே ரொம்ப நாள் ஆச்சே என்று உளுந்து வாங்கி வந்தேன் . அதுவும் ரொம்ப நாளா இருந்தது சரி வேலையை விட்டாச்சு பொடி செய்வோமேன்னு செஞ்சேன் . இந்த வாரம் பாதி நாள் தோசைதான் சாப்பிடுறேன் . இதுதான் சொந்தக் காசில் சூனியம் வச்சுக்கிறதா? நான் செய்த எலுமிச்சை ஊறுகாயும் சாப்பிடும் அளவுக்கு ஊறி வந்திடுச்சு அது இன்னமும் அவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சது அது முடியும் வரை சைடு டிஷ் செய்வதும் நின்று போய்டும் என் சொந்தக் கையால் எனக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு.என் தோசைக் கொடுமையில் இருந்து நான் வெறுத்துப் போய் என்றோ எடுத்த முடிவு என் வீட்டில் தோசையே சுட மாட்டேன் , என்ன ஒன்னு வரப் போற புண்ணியவானுக்கு தோசை பிடிக்காத உணவாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் .
