இந்தமுறை பயணம் ரயிலில் இருந்தே இனிமையாய் ஆரம்பித்தது (எல்லாத்துக்கும் சேர்த்து பின்னாடி வேட்டு வச்சுட்டுள்ள) . எப்போதுமே ரயில்பயணம் நான் விரும்பியபடி இருக்காது . ஆனா இந்தமுறை 2 குட்டிபசங்க குடும்பமாய் , ஒரு இளந்தம்பதி, ஒரு கர்னல் மனைவி , நான் என எங்க போர்சன் புத்தகப் பரிமாற்றம் , பழம் , ஜூஸ் பரிமாற்றம் என்று நல்லா இருந்தது . குட்டிபசங்கதான் சரியான வாய் , வால் பசங்க . ட்ரெயின் கிளம்பும்போதே சப்பாத்தி , வேக வச்ச முட்டைன்னு வெளுத்து வாங்குறாங்க . எனக்கு பசி கிள்ளுது . சின்னவனுக்கு 5 வயது , பெருசுக்கு 7 . சப்பாத்திக்கு முன்னாடியே பெரியவன் முட்டை சாப்பிட சின்னவன் ஜோயல் "ஏல நீ மாத்தி மாத்தி தின்கிறியோ " என்று கேட்க அடப்பாவிங்களா எப்படி சாப்பிட்டா என்னடா எல்லாம் ஒரு இடத்துக்கு தானே போகுதுன்னு நான் பசியோட இருக்க வந்தாரு மகராசன் பராட்டவோடு . முட்டை பரோட்டா முப்பது ருபாய் . வாங்கிட்டேன் பசியோடு ஓபன் பண்ணா வெறும் பரோட்டா 2 , ஒரு முட்டை போட்டா குருமா கவர் இதான் முட்டை பரோட்டா அதை பார்த்து எல்லாரும் சிரிச்சுட்டோம் . எப்படிலாம் ஏமாத்துறாங்க? .
வழக்கம் போல் ட்ரெயின் விருதுநகர் தாண்டி மெதுவாய் செல்ல இரண்டு வாண்டுகளும் ஜன்னலோரம் உக்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தவாறே ட்ரெயின் மெதுவா போற காரணங்களை அலசி ஆராய்றாங்க. அவர்கள் கூறிய காரணங்கள் . பெரியவன் "ஏன்ல ட்ரெயின் மெதுவா போகுது ?" சின்னவன் "ட்ரைன்ல காத்து நிக்கல " , அடுத்தமுறை , பெரியவன் "ஏன்ல ட்ரெயின் மெதுவா போகுது ?" சின்னவன் " ட்ரெயின் செத்து போச்சு ", கொஞ்சநேரம் பிறகு , பெரியவன் "ஏன்ல ட்ரெயின் மெதுவா போகுது ?" சின்னவன் "ட்ரெயின்க்கு சுகர் " எப்படிலாம் யோசிக்குறாங்க " .
பெரியபையன் என் பக்கத்துல இருந்துகிட்டே சின்னவனை பத்தி குறை சொல்ல அவன் "எலேய் பொய் புளுவாதல்ல " என்று சொல்ல என்னால திருநெல்வேலி வரும்வரை சிரிச்சு முடியலை .
அடுத்து பஸ் பயணம் , பஸ்ல பாட்டு அவ்வளவு சத்தமா வச்சுக்கிட்டு நடத்துனர் கத்தி கத்தி டிக்கெட் கேட்க ஏன் இவ்வளவு சத்தமா முதல்ல பாட்டு வைக்கணும் என்று இருந்தது . கொஞ்ச நேரம் போனபிறகு பின்னாடி இருந்து ஒரே சத்தம் ஒரு பையன் "யோவ் டிரைவர் பாட்ட நிறுத்துயா " என்று சத்தம் போட நடத்துனருக்கும் அவனுக்கும் சிறு வாய்த்தகராறு வர ஒருவழியாய் பாட்டை நிறுத்தியாச்சு . சரி ஒரு தொல்ல விட்டதுன்னு நிம்மதியா இருந்தா பஸ் காவல் நிலையம் முன்பு நிறுத்தி அந்த பையனை போலீஸ் கிட்ட ஏதோ பெரிய தகராறு பண்ணா மாதிரி நடத்துனர் புகார் சொல்றாரு . நடந்தது இதுதான் அந்த பையனுக்கு மொபைல் ல பல முறை கால் வந்திருக்கு அவனால பாட்டு சத்தத்துல பேச முடியாம கஷ்ட படவே பாட்டை நிறுத்த சொல்லிருக்கான் . இதுக்கு காவல் நிலையம் போகனுமா ? பையனும் இதை கொஞ்சம் பதினெட்டு வயசு முறுக்குல நறுக்கென்று சொல்ல அங்கிருந்த பெண் போலீஸ் " என்னல நானும் பார்த்துட்டே இருக்கேன் பெரிய ம_ _ கணக்குல பேசிகிட்டு இருக்க " என்று சவுண்ட் விட ஐயோ பாவம் பையன் கூடகொஞ்சம் வாய்துடுக்குல பேசி அடி வாங்கிட கூடாதே என்று இருந்துச்சு . நல்ல வேலை பையன் அப்புறம் கொஞ்சம் நிதானமாவே பேசிட்டான். அரசுத்துறை அரசாங்க ஊழியர்களுக்கே ஆதரவுக் குரல் குடுப்பது எப்போ நிற்கும்னு தெரியல .
*************************************************************
ஊர் திருவிழா , பல வருடங்களுக்குப்பின் இந்தமுறை ஒருவழியா போயிட்டேன் . ஊர்ல நிறைய மச்சான்ஸ் உண்டு அதிலும் ஒருத்தர் அவ்வளவு பாசம் . கோவிலில் வைத்து "என்னக் கொழுந்தியா எப்போ வந்த ? " நானும் " ம் வந்தாச்சு, யோவ் மச்சான் இலை குடும் " பஞ்சாமிர்தம் வாங்கத்தான் . கோவிலில் இருந்து வரும் வழியில் மீண்டும் அதே மச்சான் " கொழுந்தியா நாளைக்கு நம்ம வீட்லதான் உனக்கு சாப்பாடு என்ன சமைக்க? " , "பிரியாணி செய்யும்வே சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சு " , " ஆகட்டும் கண்டிப்பா வந்துரனும் " சரின்னு சொல்லிட்டு வந்தேன் ஆனா போகல . அடுத்தமுறை என்னை பார்க்கும்போது திட்டு இருக்கு . ஊருக்கு போனாலே அதுவரை சென்னை மக்களுக்காய் பேசிய வாய் ஊராரை பார்த்தாலே நம்ம பேச்சு தன்னால சரளமா வருது . இந்த மச்சான் குடும்பம் எங்க வீட்டு பெரியவங்க கிட்ட வேறொரு பிரச்னை மூலம் பேச்சுவார்த்தை இல்லை . ஆனா என்கிட்ட இதுவரையிலும் குடும்ப சண்டையை அவர் குடும்பம் காமிச்சது இல்லை , எப்போ ஊருக்கு போனாலும் அவர்கள் அண்ணன் தம்பிகள் நான்கு பேர் " என்ன கொழுந்தியா எப்போ வந்த ? எப்படி இருக்க ?" என்று நலம் விசாரிப்பாங்க இதான் கிராம மக்களின் குணம் .
*****************************************************************
கந்தூரி விழா பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியல . ஊர் அருகில் இருக்கும் பள்ளிவாசலில் வருடந்தோறும் வெகு விமர்சையாய் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் விழா இது . மதம், ஜாதி என்ற வேறுபாடு இல்லாமல் சுற்று வட்டார மக்களும் ஆண்டாண்டு காலமாய் இவ்விழாவில் பங்கெடுப்பதுண்டு . இப்பள்ளிவாசலின் பெயரே என் அப்பாவால் எனக்கு சூட்டப்பட்டது . நோன்பு இட்டு பத்து நாள் பிறகு மாலையில் நடக்கும் விளக்கு பூஜை பெயர் பெற்றது .
பள்ளி உள்ளே போய் ஏதோ ஒரு நம்பிக்கையில் கடவுளை மனதினுள் வேண்டிக்கொண்டே அங்கிருக்கும் உண்டியல் குடத்தில் மக்கள் காணிக்கை இடுவாங்க . சில மத முஸ்லிம் பெரியவர்கள் நமக்கு சின்ன சின்ன உருண்டைகள் நிறைந்த பாக்கெட் ஒன்னு விபூதி மாதிரி தருவாங்க . வெளியில் வந்ததும் முதல் வேலை அதை உடைத்து தின்பதே , நல்ல இனிப்பாய் இருக்கும் .
இரவு 11 மணி வாக்கில் வான வேடிக்கைகள் ரொம்ப நேரம் நடக்கும் . பல வருடங்களுக்கு முன்பு ரொம்ப சிறப்பா நடந்த இவ்விழா இப்பொழுது அவர்களுக்கிடையில் நடந்த கோஷ்டி மோதலில் ஏதோ பெயருக்கு நடத்துறாங்க . குறைவான கூட்டமே இருந்தது இம்முறை பார்க்கவே மனசு கஷ்டமா போச்சு . ஏழு வருடங்களுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட கந்தூரி விழா ஜுரம் இருந்ததினால் ஒரு மணி நேரம் மட்டுமே அங்கு இருக்க முடிந்தது . அந்த மட்டும் போனதே 2 இன்ஜெக்சன் துணையுடன் .
ஆப்பு : ஜாலியா ஊருக்கு போன நான் அன்ன ஆகாரம் இல்லாமல் 10 நாள் மருத்தவ மனைக்கும் வீட்டுக்குமே போயிட்டு வந்துட்டு இருந்தேன் , இந்த மருந்து மாத்திரை எல்லாம் எவன்யா கண்டு பிடிச்சான் ?. அதனாலேயே 20 நாள் நல்லா வீட்ல இருந்தாச்சு . வாங்கின மாத்திரையில் ஒன்னு கூட சாப்பிடல . அதயெல்லாம் பார்த்து பார்த்தே நான் இல்லாத நேரத்தில் வீட்டில் எனக்கு அர்ச்சனை நடக்கும் .




