இது எங்கள் ஊர் பகுதிகளில் நடக்கும் கோவில் கொடை விழாவில் நடக்கும் ஒரு சின்ன பகுதி, வட்டார மொழி வழக்கில் . (எந்தளவு புரியப்போகுதுன்னு தெரியல , தமிழ் அகராதி தேட வேணாம் )
"யோவ் தள்ளுங்கப்பா தள்ளுங்க ,தள்ளுங்க என்னப்பா இங்க பிரச்னை ? சப்பரம் ஏன் போகாம நிக்கு? ஏ முத்து நீ ஏம்ல இப்படி விரைச்சுகிட்டு நிக்க ?" இது ஊர் பெருசுகளில் ஒரு பெருசு .
"மாமா நான் சொல்றேன் " என்றது ஒரு இளவட்டம் .இசக்கி நீ சொல்லு என்னல நடந்துச்சு ?
"அது ஒண்ணுல்ல மாமா இந்தா சப்ரம் தூக்குரானே நம்ம பரமசிவத்துக்கும் , முத்து சித்தப்பா மவன் முருகனுக்கும் ரெண்டு நாள் முன்னாடி நம்ம தரிசி வய பத்துல தண்ணி அடைக்கும்போது சின்ன வாக்குவாதம் . அதான் பரமசிவம் சப்ரம் தூக்குற பயனுவட்ட எல்லாம் ஏல எவனும் முருகன் வீட்டு முன்னாடி சப்ரத்த நிப்பாட்ட கூடாதுன்னு சொல்லிட்டான். பயனுவலும் நிக்கல அதான் முத்து சித்தப்பா என் வீட்டுல தேங்கா பழம் ஒடைக்காம சப்ரம் ஒரு அடி போக்கூடாதுன்னு சத்தம் போடுறாரு " என்று சொல்லி முடித்தான் .
ஏல என்னல்ல நினைசுகிட்டு திரியிரீய ? ஒங்க ரெண்டு பேரு சண்டைய ஊரு சண்டைய ஆக்குரீயளால ? ஏல ஏற்கனவே ஊர்ல இருக்க பிரச்சன பத்தலையால உங்களுக்கு . அவஅவன் வேலை வெட்டிய விட்டுபுட்டு வரிய வாங்கி வருஷம் ரெண்டு கொட குடுக்குரதுக்குள்ள உயிர் போவுது , இதுல நீங்க வேற ஏம்ல கரைச்ச பன்றிய? ஏல முத்து அவனுவதான் சின்ன பயனுவ மண்டைல மசாலா இல்லாம வெளாட்டு வாக்குல ஏதோ செய்ரானுவன்னா நீயும் சின்ன பையன் மாதிரி ஏம்ல சப்பரத்த மறிச்சு வச்சுட்டு நிக்க ?
"இல்லனே ஏற்கனவே நான் கொலை செஞ்சுட்டு இங்க வந்தம்னு என்கிட்ட பத்து வருசமா வரி வாங்க மாட்டேங்குரீய , சரி வரிதான் வாங்கல வீட்டு முன்னாடி தேங்கா பழம் ஓடைக்க சப்ரமாவது நிக்குதேன்னு நானும் இதுவரைக்கும் ஒன்னுஞ் சொல்லல . ம .............டி இந்த சின்ன பயலுவ இந்த வாட்டி அதையும் நிக்காம கொண்டு போறானுவ . அதான் கொஞ்சம் சத்தம் போட்டுட்டேன் "
சரிப்பா சரிப்பா எங்க சத்தி நைனா ? தேங்கா பழத்த ஒடைக்க சொல்லுப்பா . " எலேய் சப்ரம் தூக்குரவனுவலா ஒங்களோட பெரிய பாடா போச்சுல . அங்கங்க சொணங்காம ஒரு மணிக்குள்ள சப்ரத்த சீக்கிரம் சுத்தி கோயிலுக்கு கொண்டு வந்துருங்கள . சீக்கிரம் மதியக் கொடைய முடிச்சுட்டு ஊர் வரி போட வேண்டாமா ,பொங்கி ஆக்கி சாப்ட வேண்டாமால . தூக்குங்கப்பா தூக்குங்க தூக்குங்க .
பி.கு.புரியாதவர்கள் கண்டபடி திட்டிடாதீங்க .
