ஆண் பெண் நட்பு
போன வாரம் நீயா நானா விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி . ரொம்ப நாள் பிறகு நீயா நானா அதுவும் கொஞ்சம் பிடித்த தலைப்பு பார்க்க ஆரம்பிச்சதே கொஞ்சம் லேட் என்றாலும் சிலர் பேசியதைப் பார்த்தபோது லேட்டா பார்த்ததே நல்லது என்று இருந்தது . எதிரணியில் ஆண் பெண் நட்பு கூடாது என்று பேசியவர்கள் மனுசங்களா . அதிலும் மகளுடன் வந்த ஒரு ஆசிரியர் அவருக்கு இருந்த தெளிவு அவரிடம் படிக்கும் மாணவர்கள் பாவம் . அவர்தான் அப்படி என்றால் அவர் மகள் அதற்கு மேல் நாடக பாணியில் பேசியது பார்க்கவே வெறுப்பாய் இருந்தது . படிப்பு தவிர பசங்ககிட்ட பேச என்ன இருக்கு நான் படிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன் என்றார் பெருமையாய் . அவர் தாய் அதனால்தான் என் பெண் எப்பொழுதுமே படிப்பில் முதலாவதாய் வருகிறாள் என்றார் கொடுமைடா சாமி . சிலர் ஆண் பெண் நட்பு இனக்கவர்ச்சி ,உடல்கவர்ச்சி என்று இபப்டி இவர்களால் இவ்வளவு மட்டமாய் சிந்திக்க முடிகிறது . இருட்டு ,தனிமை , தூண்டல் ,ஆண்,பெண் இறுதியில் பெண் பாவம் இப்படித்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது . நல்ல நட்பு மட்டுமே இருக்கும் இடத்தில் எத்தனை இரவுகள் வேண்டுமானாலும் எவ்வளவு தனிமையிலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்த அசம்பாவிதமும் நடக்காது . வெறும் உடல் சார்ந்து மட்டுமே ஆண் பெண் நட்பை பார்க்கும் கண்களில் தீயை வைக்க .
என் படிப்புக் காலங்கள் அத்தனையும் ஆண்களுடன்தான் இருந்தது .கல்லூரியில் படிக்கும்போதே ஆண்களுடன் பெண்கள் பேசினால் விசாரணைக் கமிசன் வைக்காத குறையாக விசாரிப்பு இருக்கும் .அவர்கள் லிஸ்டில் முதல் ஆள் நான் தான் இருப்பேன் . அதன் பிரதிபலிப்பு இன்டெர்னல் மார்க் 12 மேலே தாண்டாது அதனாலேயே நான் மெனக்கிட்டு படிக்கிறதும் இல்லை ஒரேயடியாய் செமஸ்டர்தான் .அய்யய்யோ பசங்களுடன் எப்படித்தான் இந்தப் பெண்கள் பேசுகிறார்களோ என்று பேசிய பெண்கள் எல்லாம் இன்று காதல் திருமணம் செய்து சவுக்கியமாய் உள்ளனர் .நான்காம் வருடம் சுற்றுலா போய் திரும்பி கோவை வழியே வருகையில் இரவு எட்டு மணிக்கு எங்களை அப்படியே விட்டுவிட்டு கூட வந்த ப்ரொபசரின் பெண்ணை பிக் அப் செய்ய போயாச்சு . அந்த இரவில் ரோடு கிராஸ் பண்ணுவதில் இருந்து பாத்ரூம் .ஹோட்டல் என அத்தனை இடங்களுக்கும் எங்கள் கூட வந்தது பசங்கதான் . எங்கேயோ நான் மட்டும் தனியாய் மாட்டிகொண்டு பேக்கு மாதிரி ஒருவனிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எங்கிருந்தோ வந்து எனக்கு துணையாய் நின்றான் என் நண்பன் .அந்த இரவு பற்றிய விசாரணைக் கமிசன் ஏதும் வைக்கப்படவில்லை .
இன்றும் பள்ளி கல்லூரி நண்பர்கள் பலர் தொடர்பில் இருக்கின்றனர் . காஸ்மீரில் இருக்கும் கல்லூரி நண்பன் வாழ்த்த எந்த பண்டிகைக் காலமும் மறந்ததில்லை . சென்னையின் ஒரு புது இடத்துக்கு போக வேண்டுமா உடனே நான் தொடர்பு கொள்வது நண்பனைத்தான் . BSNL எக்ஸாம் அன்று தரையில் கால் வைக்க முடியாத அளவு உள்ளங்கால் வலி அன்று ஒரே இடத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் எக்ஸாம் .என்னால் வர முடியாததை சொன்னபோது "லூசு ஒழுங்கா எக்ஸாம் வா நம்ம xxxxx வந்து உன்னை கூட்டிட்டு போவான்" என்று அவன் ட்ரெயினில் வர அவன் அறை எங்கள் கல்லூரி நண்பன் என்னை என் இடத்துக்கே வந்து பைக்கில் கூட்டிட்டு போய் எக்ஸாம் எழுத வச்சு திரும்ப கூடவே வந்த இன்னொருவன் என்று அத்தனையும் நான் கேளாமலே செய்தவர்கள் அவர்கள் .எங்கே போவதாய் இருந்தாலும் அம்மா/அண்ணா என் பசங்க கூடத்தான் போறேன் என்று சொன்னவுடனே அப்படியா சரி என்று என்னைப் பற்றி பயப்படாமல் வீட்டில் தைரியமாய் இருப்பர் . எந்த ரத்த சொந்த பந்தங்களுடனும் வராத ஒரு உணர்வு ,ஒரு தைரியம் ,நம்பிக்கை என்று எல்லாமுமாய் வருவது நண்பர்களிடம்தான் . நிகழ்ச்சியில் பேசியவர்கள் பெரும்பாலும் பாலுனர்வுடனே பேசினர். ஒரு பொது இடத்தில் ஆணோ பெண்ணோ அவர்களின் ஆடை சிறிது விலகி இருந்தாலும் எந்த தயக்கமும் இன்றி நண்பர்களால் மட்டுமே சொல்ல முடியும் .
நிகழ்ச்சியில் பேசியவர்களின் பயம் நட்பு திருமணத்தில் போய் முடிந்து விடுகிறது அது வேறு ஜாதி திருமணமாய் ஆகிவிடுகிறது . இவங்க என்ன சொல்ல வராங்க அப்போ ஒருவரிடம் நம் நட்பை ஆரம்பிக்கும் முன் நீ என்ன ஜாதி என்று கேட்டுதான் பழக வேண்டுமா ?. அப்படி ஜாதியின் அடிப்படையில் வருவதற்கு பெயர் நட்பா ?.ஒத்த மன சிந்தனையை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு எந்த நோக்கமும் இன்றி வருவதுதானே நட்பு . அப்படி வரும் நட்பு திருமணத்தில் முடிவதிலும் என்ன தவறு இருக்கப் போகிறது . என்னுடன் பள்ளியில் படித்தவன் என் பிரெண்ட் வீடு அருகிலேயே இவன் வீடும் உள்ளதால் அப்படியே போய் வருவது வழக்கம் .அவன் அம்மா அக்கா என அவர்கள் குடும்பத்துக்கு பிடித்து போய் இவனிடம் விரும்புகிறாயா என கேட்க இவனும் என்னிடம் மறைமுகமாய் சொல்ல என் விருப்பமின்மையை நானும் சொல்லிவிட்டேன் . அதன் பின்னரும் எங்களுடனான நட்பு தொடர்கிறது . நல்ல குடும்பம் ,நல்ல படிப்பு ,நல்ல வேலை எந்த விதத்திலும் குறைவில்லை .ஆனாலும் அவன் டவுசர் போட்ட காலம் முதல் தெரியும் என்பதால் அவனை ஒரு வளர்ந்த பையனாகவே நான் நினைத்து பழகவில்லை . பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு அந்த ஒரு நிகழ்ச்சிக்கு பின் நட்பாகத்தான் இன்றளவும் இருக்கு .
பேய் ,பிசாசு ,பரதேசி ,பன்னிகுட்டி ,லூசு ,பக்கி இன்னும் இதையும் தாண்டிய பல அரிய வார்த்தைகளை தங்கு தடையின்றி நண்பர்களிடம் மட்டுமே பயன்படுத்த முடியும் .என் குரலோ முகமோ கொஞ்சம் சோகமாய் இருந்தாலும் "ஏண்டா டல்லா இருக்கே " "சரி ஆய்டும் குட்டிமா பீல் பண்ணாதே ", "பக்கி அழாதே ","சும்மா தட்டி விட்டுட்டு போவியா " என்று வரும் ஆறுதல்கள் நண்பர்களிடம்தான் . சொந்தக் கதை சோகக் கதை மத்தக் கதை என்று மணிக்கணக்காய் பேசி சிரிப்பதும் நண்பர்களிடம்தான் . எந்த தொடக்கமும் இன்றி வாழ்வோட்டத்தின் இடையில் வந்து சேரும் அந்த உறவுகள்தான் எத்தனை வலிமையானவை . அதை வெறும் இனக்கவர்ச்சி என்று பாலியலோடு தொடர்பு படுத்திப் பேசும் பதர்களை என்ன செய்வது ?. எந்த பிரதிபலனும் பாராமல் ஒருவருக்கொருவர் செய்திடும் உதவிகள்தான் எத்தனை எத்தனை . இது உன்னால் செய்ய முடியுமா என்று கேளாமல் இதை நீ செய்றே என்று கட்டளையிடும் அன்பு வேறு யாரிடம் இருக்கும் . நண்பனிடமிருந்து அழைப்பு "மதார் எனக்கு கல்யாணம் இப்பவே return ticket எடுத்துடு " அவன் பேசியதும் சிரிப்புதான் வந்தது . என்ன நம்பிக்கையில் நீ என்னை வா என்று கூட அழைக்காமல் டிக்கெட் போடுவதைப் பற்றி பேசுறே அவ்வளவு நம்பிக்கையா என்மேல் என்றால் அவன் சிரிக்கிறான் . நீ என் பிரெண்ட் கண்டிப்பா வருவே வரணும் என்றான் இதற்க்கு பெயர் என்ன ?. கூடப் பிறந்த உறவுகளிடம்கூட உதவி கேட்க தயங்குகையில் எந்த தயக்கமும் இன்றி முதலில் கேட்பது நண்பர்களிடம்தான் . எத்தனை வயதானாலும் சின்னக் குழந்தைகள் போல் நம்மை இயங்க வைப்பதும் நண்பர்கள்தான் .நண்பர்களில்லா வாழ்க்கை நீரிலா பாலைவனம்போல்தான் . நட்பு என்ற வார்த்தையில் ஆணென்ன பெண்ணென்ன எல்லாமே மனதில் இருக்கிறது .
